செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி மோசடி - வாலிபர் கைது

Published On 2018-08-31 09:28 GMT   |   Update On 2018-08-31 09:28 GMT
புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்தவர் சிபி. இவர் அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.5 ஆயிரம் எடுக்க சென்றார்.

அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் பணம் எடுக்க உதவுவதாக கூறி சிபியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கினார்.

பின்னர் அவர் ரூ.2 ஆயிரத்தை மட்டும் சிபியிடம் கொடுத்தார். வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் இல்லை. பணம் குறைவாக இருக்கிறது என்று கூறி அந்த வாலிபர் சென்று விட்டார்.

இதற்கிடையே சிபி வீட்டிற்கு வந்தபோது வங்கி கணக்கு வைத்திருந்த அவரது தாயின் செல்போனில் ரூ.9 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக எஸ்.எம்.எஸ். வந்திருப்பது தெரிந்தது. பணம் எடுக்க உதவி செய்வதாக கூறிய வாலிபர் ரூ.7 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்து சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த ஏ.டி.எம். மையத்தை கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்த தண்டபாணி என்பதும், சிபியிடம் நூதன முறையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். தண்டபாணி இதுபோல் எந்தெந்த இடங்களில் மோசடியில் ஈடுபட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News