செய்திகள்

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற என்ஜினீயர் ரெயில் மோதி பலி

Published On 2018-08-27 20:13 GMT   |   Update On 2018-08-27 20:13 GMT
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்ற என்ஜினீயர், “ஹெட் போனில்” பாட்டு கேட்டுக்கொண்டே சென்றதால் ரெயில் மோதி பலியானார்.
கொரடாச்சேரி:

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்ற என்ஜினீயர், “ஹெட் போனில்” பாட்டு கேட்டுக்கொண்டே சென்றதால் ரெயில் மோதி பலியானார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையை அடுத்த குமரமலை கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் மார்ட்டின்(வயது 24). என்ஜீனியரான இவர், வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு பாதயாத்திரையாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

நேற்று காலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிளரியம் ரெயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் மார்ட்டின் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் தனது காதில் “ஹெட்போனை” மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டபடி நடந்து சென்றார். அந்த நேரத்தில் தஞ்சையில் இருந்து காரைக்காலை நோக்கி பயணிகள் ரெயில் சென்றது. மார்ட்டின் காதில் “ஹெட்போன்” மாட்டி இருந்ததால், ரெயில் வந்த சத்தம் அவருக்கு கேட்கவில்லை. இதனால் ரெயில் மார்ட்டின் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மார்ட்டின் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான மார்ட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News