செய்திகள்

எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் போராட்டம் நடத்துவோம்- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

Published On 2018-08-27 10:07 GMT   |   Update On 2018-08-27 10:07 GMT
கோரிக்கையை மீறி டாஸ்மாக் கடை அமைத்தால் அனைவரும் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்து மனு கொடுத்தனர்.

தஞ்சையை அடுத்த பிள்ளையார் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பிள்ளையார்பட்டி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு 6 ஏரிகள் மற்றும் 16 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் ஏரிகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளன.

ஒரே ஒரு ஆழ்துளை கிணற்றில் மட்டும் தண்ணீர் உள்ளது. அதை எடுத்து அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. பிள்ளையார்பட்டி பகுதியில் கல்லணை கால்வாய் செல்கிறது. அதில் தற்போது அதிகளவில் தண்ணீர் செல்கிறது. எனவே ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கும்பகோணம் அடுத்த திருப்புவனம் பூக்கொல்லை தெரு மற்றும் தென்றல் தெருவை சேர்ந்த பெண்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்புவனம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் பெண்களுக்கும் இடையூறு ஏற்படும். எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

எங்கள் கோரிக்கையை மீறி அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் அனைவரும் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News