செய்திகள்

தோவாளையில் முத்தாரம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2018-08-26 14:36 GMT   |   Update On 2018-08-26 14:36 GMT
முத்தாரம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி: 

ஆரல்வாய்மொழியை அடுத்த தோவாளை புதூர் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யப்பட்டு வருகிறது. கோவில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் உள்ளார். இன்று காலையில் மனோகரன் கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அணைப்பதற்காக சென்றார். அப்போது கோவில் வளாகத்திற்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ஊர் தலைவர் தென்கரை மகாரா ஜனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். உண்டியல் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவில் உண்டியல் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை திறக்கப்படும். தற்போது உண்டியல் திறக்கப்பட்டு 5 மாதம் ஆகிறது. இதை அறிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்கள் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News