செய்திகள்

போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கு ஐகோர்ட்டு கண்டனம்

Published On 2018-08-23 02:56 GMT   |   Update On 2018-08-23 02:56 GMT
மாணவிக்கு போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட அலுவலரை பணி இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டது. #FakeTC #HighCourt
சென்னை:

கேரள மாநிலம் பாலக்காட்டில் மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றியவர் திரவியம் தினேஷ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கீர்த்தனா. தற்போது சென்னையில் வக்கீலாக பணிபுரியும் திரவியம் தினேஷும், அவரது மனைவியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் திரவியம் தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவி பாலக்காட்டில் உள்ள புனித ரபேல்ஸ் கதீட்ரல் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த தனது மகள் கீர்த்தனாவுக்கு சென்னை நாகல்கேணியில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாக போலி மாற்றுச்சான்றிதழ் பெற்று பெங்களூருவில் உள்ள சிலிக்கான் சிட்டி பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்த்துள்ளார். எனவே, அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரரின் மகள் சென்னை நாகல்கேணியில் உள்ள பள்ளியில் படிக்காத நிலையில் பள்ளி நிர்வாகம் அவருக்கு போலியாக மாற்றுச்சான்றிதழ் வழங்கியது கண்டிக்கத்தக்கது. இதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அந்த பள்ளியை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இருந்தாலும் அங்கு படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை.

போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய அலுவலரை பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

குடும்ப பிரச்சினை தம்பதியினருக்கு இடையே மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  #FakeTC #HighCourt
Tags:    

Similar News