முருங்கப்பாக்கத்தில் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததில் தகராறு- கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது33). வீட்டிலேயே ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமலிங்கம். வீட்டுக்கும் இடையே பொதுஇடம் இருந்தது. இதனை இருவரும் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை முழுவதையும் ஆக்கிரமித்து ராமலிங்கம் கர்ஷெட் அமைத்தார். இதனை வெங்கடேசன் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று ராமலிங்கம் அமைத்திருந்த கார்ஷெட் மீது யாரோ கல்வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை வெங்கடேசன்தான் செய்ததாக கருதி ராமலிங்கமும், அவரது மருமகனும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற வெங்கடேசனின் கர்ப்பிணி மனைவியான லதாவையும் அவர்கள் தாக்கி ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த லதா ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.