செய்திகள்

அ.தி.மு.க.வில் சேர்ந்தால்தான் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2018-08-20 09:11 GMT   |   Update On 2018-08-20 09:11 GMT
அ.தி.மு.க.வில் சேர்ந்தால் தான் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #TNMinister #SellurRaju
மதுரை:

மதுரை முனிச்சாலையில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமில் புதிய உறுப்பினர் படிவங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த மாபெரும் இயக்கத்தை நாட்டின் 3-வது பெரிய கட்சியாக மாற்றி காட்டியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு பணியாற்றும் என்ற அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றும் வகையில் இங்கே இளைஞர்கள் திரண்டு இருக்கிறீர்கள். அ.தி.மு.க.வில்தான் புதியவர்கள் பதவிக்கு வரமுடியும்.

நான் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவியை பெற்று விட்டேன். இனி உங்களை போன்ற இளைஞர்களுக்குத் தான் பதவிகள் கிடைக்கும். நீங்கள் இந்த இயக்கத்துக்கு கடின உழைப்பை தந்தால் பதவி உங்களை தேடிவரும்.

அ.தி.மு.க.வில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். மற்ற கட்சியில் அப்படி கிடையாது. தி.மு.க.வில் ஒரு குடும்பம் மட்டுமே பதவிக்கு வர முடியும். எனவே இளைய சமுதாயம் விழித்து எழுந்து அ.தி.மு.க. இயக்கத்திற்கு தங்கள் ஆதரவை தர வேண்டும். இனிவரும் எந்த தேர்தல்களிலும் இளைஞர்களின் முக்கியத்துவம் அ.தி.முக.வில் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ், நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா, அன்புசெழியன், இளைஞரணி நிர்வாகிகள் பார்த்திபன், சரவணன், சசிக்குமார், பரமேஸ்வரன், செந்தில்குமரன், முன்னாள் கவுன்சிலர் சண்முகவள்ளி, முத்துக்கிரு‌ஷணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
Tags:    

Similar News