போடி பகுதியில் மானாவாரி விவசாயிகள் உழவு பணிகளில் தீவிரம்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தென்னை, மா உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இது அல்லாமல் வானம் பார்த்த பூமியாக மொச்சை, அவரை, நிலக்கடலை, எள்ளு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக போடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் செழித்து காணப்படுகிறது. தற்போது நிலங்கள் தேவையான அளவு ஈரப்பதத்துடன் காணப்படுவதால் அவற்றை உழுது பன்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக போடி - சிலமலை ராணிமங்கம்மாள் சாலை பகுதியில் விவசாயிகள் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழை கைகொடுத்தால் விரைவில் பயிர்கள் நடத் தொடங்கி விடுவார்கள்.
மேலும் தென்னை மரங்கள் தற்போது செழித்து தேங்காய்கள் தடிமனாக காணப்படுகிறது. இதனால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.