செய்திகள்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

Published On 2018-08-18 06:56 GMT   |   Update On 2018-08-18 06:56 GMT
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 20-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #VaigaiDam #EdappadiPalaniswami
சென்னை:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு மழைக்காலங்களில் மேகமலை, வெள்ளிமலை, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையின் மூலமாக நீர்வரத்து ஏற்படும். பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் வைகை அணைக்கு வரும். கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால் வரலாறு காணாத அளவில் நீர்மட்டம் குறைந்து வந்தது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் 22 அடி வரை சரிந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கேரளாவில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு, வைகை அணையில் தேக்கப்பட்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியதையடுத்து, 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக வரும் 20-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். #VaigaiDam #EdappadiPalaniswami
Tags:    

Similar News