செய்திகள்

உசிலம்பட்டியில் இன்று கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2018-08-17 11:46 GMT   |   Update On 2018-08-17 11:46 GMT
உசிலம்பட்டியில் இன்று கிராம மக்கள் திடீர் சாலை மறியல் கண்மாயில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தில் கண்மாய் உள்ளது. மழை பொய்த்து போனதால் இந்த கண்மாய் சில ஆண்டுகளாக வறண்டு உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் மாதரை கண்மாயை ஆழப்படுத்தும் நோக்கில் மண் எடுத்து செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் மாதரை கண்மாயில் மணல் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் எடுத்ததாக தெரிகிறது. இதற்கு மாதரை கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மணல் அள்ளுவதை உடனே நிறுத்தவேண்டும் என கிராமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் மணல் எடுப்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதனை கண்டித்து இன்று அந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுரை- தேனி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News