கள்ளக்குறிச்சியில் வாலிபருக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது நண்பர் முகமது சலீம்(29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ராஜா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த கனகராஜ்(29) என்பவர், மணிகண்டன் மீது மோதுவது போல் சென்றார்.
இதனால் மணிகண்டனும் முகமது சலீமும் கனகராஜிடம் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ் தனது நண்பர் சதீசுடன்(28) சேர்ந்து மணிகண்டனையும், முகமது சலீமையும் தாக்கினார். அப்போது அவர்களும் கனகராஜ், சதீஷ் ஆகியோரை தாக்கினர். இதற்கிடையே கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி கனகராஜ், சதீஷ் மற்றும் முகமது சலீம் ஆகியோரை கைது செய்தனர்.