செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-08-15 09:28 GMT   |   Update On 2018-08-15 09:28 GMT
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளதால் அந்தமான், வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

காவிரி, பவானி, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் கரையோரம் சென்று யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாம். தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதிகளில் யாரும் நீச்சலடிக்கக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட தரைப்பாலங்களை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டாம்.

அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 9 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், நெல்லை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெள்ளதடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி அளவுக்கு நீர்வரத்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 27 செமீ மழை பெய்துள்ளது.  கோவை மாவட்டம் சின்ன கல்லார் பகுதியில் 21 செமீ,  கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 20 செமீ, பாபநாசத்தில் 19 செமீ மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News