செய்திகள்

திருவண்ணாமலை அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் 8 பவுன் நகை, பணம் திருட்டு

Published On 2018-08-13 11:29 GMT   |   Update On 2018-08-13 11:29 GMT
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் புதூரில் போலீஸ் ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் புதூர் அண்ணாமலையார் நகரில் வசிப்பவர் அசோக்குமார். செங்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றுகிறார்.

இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி செங்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை அசோக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது.

வீடு பூட்டியிருந்ததால் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் அசோக்குமார் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News