செய்திகள்
போடி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
போடி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி:
போடி அருகே பெருமாள் கவுண்டன் பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் பொதுமக்கள் அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் பெருமாள்கவுண்டன்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கண்ணபிரகாசம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.