செய்திகள்
தென்காசியில் சுத்தம் செய்யும்பணியில் ஈடுபட்ட எச்.ராஜா மற்றும் தொண்டர்கள்.

மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா

Published On 2018-08-13 10:38 GMT   |   Update On 2018-08-13 10:38 GMT
தமிழகத்தை முன்னேற்றமடைய செய்யும் புதிய திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். #BJP #HRaja
தென்காசி:

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்திருந்தார். முன்னதாக குற்றாலத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் குற்றாலம் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சாமக்கொடை திருவிழா என்பது பரவலாக நடைபெற கூடிய வி‌ஷயம். இதற்கு காவல் துறையினர் தேவையற்ற கெடுபிடிகளை விதிக்கின்றனர் என்ற குற்றசாட்டு உள்ளது. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாங்கள் எந்த கட்டுபாடுகளும் விதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.


விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காவல் துறையினர் எந்தவிதமான கட்டுபாடுகளும் விதிக்க கூடாது. ஒலிப்பெருக்கி பயன்படுத்தாத மத சடங்குகளிலும், மத ஊர்வலங்களிலும் காவல் துறையினர் தலையிட அனுமதியில்லை. மேலும் கூடன்குளம் திட்டம் வரக்கூடாது என்று வெளிநாடுகளில் நிதி பெற்று போராட்டம் நடைபெற்றுள்ளதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளி நாடுகளில் பணம் பெற்று கொண்டு போராட்டம் நடத்துபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமா? இதே போல் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாமிரத்தின் விலை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து எய்ம்ஸ், 8 வழிச்சாலை, தொழிற்சாலைகள் வரக்கூடாது என்று போராடுபவர்கள் மீது பல வழக்குகள் உள்ளது, இவர்கள் நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டியவர்கள். எனவே தமிழக அரசு அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja

Tags:    

Similar News