மதுரை ஐகோர்ட்டு அருகே பெண் கற்பழித்துக் கொலை?
புதூர்:
மதுரை கே.புதூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட உத்தங்குடியில் ஐகோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில், 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக ஒத்தக்கடை கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி ராணிக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து புதூர் போலீசில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் உடலில் 18 இடங்களில் காயங்கள் காணப்பட்டன. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் வாகனத்தில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது கடத்தி வந்து கற்பழித்துக் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.