செய்திகள்

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் - நகை திருட்டு

Published On 2018-08-12 13:15 GMT   |   Update On 2018-08-12 13:15 GMT
தஞ்சை அருகே கோவிலுக்கு சென்ற நேரத்தில் கதவை உடைத்து பணம் - நகைகள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை, ஜமால் உசேன் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 37). இவர் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை ராமையன், தாய் சேதும்மாள், மனைவி மலர்விழி, மகன் பவித்ரன் ஆகியோர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் ஒரத்தநாட்டில் உள்ள கோவிலுக்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அனைவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 2 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமையன் மற்றும் குடும்பத்தினர் இது குறித்து தமிழ் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு இது குறித்து வழக்குபதிவு செய்தனர். வீட்டின் கதவை உடைத்து பணம் - நகைகளை திருடி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு சென்ற நேரத்தில் கதவை உடைத்து பணம் - நகைகள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News