செய்திகள்

குன்னத்தூர் அருகே சம்பளம் கொடுக்காததால் மில் சூப்பர்வைசர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை

Published On 2018-08-11 10:29 GMT   |   Update On 2018-08-11 10:34 GMT
குன்னத்தூர் அருகே மில் சூப்பர்வைசர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள குறிச்சியில் தனியார் பஞ்சு மில் உள்ளது. இங்கு சூப்பர்வைசராக ஒடிசாவை சேர்ந்த போதியா கோ(20) வேலை பார்த்து வந்தார்.

இதே மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிலால் தனசன்னா (20), பிரமானந்தா (19), ராஜ்ஜி சாகுல் (20) ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள அறையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.நேற்று இரவு 4 பேரும் பணியில் இருந்தனர்.

அப்போது ஹரிலால் தனசன்னா, பிரமானந்தா, ராஜ்ஜி சாகுல் ஆகியோர் சூப்பர் வைசர் போதியாகோவிடம் சம்பள பணம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அறையில் வந்து தருவதாக தெரிவித்து இருக்கிறார். அறைக்கு வந்த பின்னரும் பணம் கொடுக்கவில்லை. இதனால் 3 பேரும் மீண்டும் சம்பள பணம் கேட்டுள்ளனர். அதற்கு போதியா கோ உடல் நலம் சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி உள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிலால் தனசன்னா, பிரமானந்தா, ராஜ்ஜி சாகுல் ஆகியோர் அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து போதியாகோ தலையில் ஓங்கி அடித்துள்ளனர்.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு குன்னத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் போதியாகோ இறந்தார்.

இது குறித்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சூப்பர் வைசரை கொலை செய்த 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட போதியாகோ உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

Tags:    

Similar News