செய்திகள்

நாமக்கல் அருகே பெண்ணை கொலை செய்து நகையை திருடிய மர்ம நபர்கள்

Published On 2018-08-10 09:08 GMT   |   Update On 2018-08-10 09:08 GMT
நாமக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக கொலை செய்துள்ள மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள கங்கானித் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி அமராவதி (வயது 70). இவர்களுக்கு சேகர்(51), சுப்பிரமணி (48), ஞானபிரகாசம்(45) என 3 மகன்களும், ராஜேஸ்வரி(52) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சண்முகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அமராவதி மகள் ராஜேஸ்வரி வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி 2-வது மகன் சுப்பிரமணி வீட்டிற்கும் செல்வார். இவர் தனியார் கல்லூரியில் டிரைவராக உள்ளார். நேற்று காலை ராஜேஸ்வரி வேலைக்கு சென்றார். அமராவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி மாலையில் வீட்டுக்கு வந்தபோது, அமராவதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினும், காதை அறுத்து ¾ பவுன் தோடும் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்து அவர் எருமாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை நகைக்காக நடந்திருப்பது தெரியவந்தது.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக கொலை செய்துள்ளனர் என்றால் இது மிகப் பெரிய கொள்ளை கும்பலாகத்தான் இருக்கும் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொடூர கொலையை செய்தவர்கள், வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் முன் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.எனவே, மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News