செய்திகள்

எலவனாசூர்கோட்டையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

Published On 2018-08-09 11:22 GMT   |   Update On 2018-08-09 11:22 GMT
அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை:

எலவனாசூர் கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் எறையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் வாலிபர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அந்த வாலிபர்கள் திடீரென டயரில் தீயை கொழுத்தி நடுரோட்டில் போட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் கல்வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி சேதமடைந்தது.

இதை பார்த்த சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை அந்த 2 வாலிபர்களையும் பிடிக்க முயன்றார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை அந்த வாலிபர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றார். அப்போது ஏழுமலை ரோட்டில் விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

காயம் அடைந்ததையும் பொருட்படுத்தாத சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தப்பி ஓடிய வாலிபர்களில் ஒருவரை விரட்டி சென்று பிடித்து மற்ற போலீசாரிடம் ஒப்படைத்தார். மற்றொரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பிடிபட்ட வாலிபரை எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

காயம் அடைந்த ஏழுமலை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர் எறையூர் பகுதியை சேர்ந்த யாக்கூப் (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து யாக்கூப்பை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News