தண்டையார்பேட்டையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ராயபுரம்:
தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் 5-வது பிரதான சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் இங்கு புதிதாக ஒரு டாஸ்மாக் மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அங்கு பள்ளி மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் மதுபான கடை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்துள்ளனர். கடை திறக்க ஐகோர்ட்டில் தடையும் பெறப்பட்டுள்ளது.
இருந்தும் மதுக்கடை மற்றும் பார் திறப்பதற்கான பணிகள் அதிவிரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 300 பேர் இன்று காலை அந்த மதுக்கடை முன்பு திரண்டனர்.
அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஏற்கனவே அங்கு செயல் படும் டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.