கண்ணமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபருக்கு அடிஉதை
கண்ணமங்கலம்:
வந்தவாசி அடுத்த கண்டவராட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 70). இவரது மனைவி ரங்கநாயகி (60). இவர்கள் உறவினர்களுடன் நேற்று படவேடு கோவிலுக்கு சென்றுவிட்டு. இன்று காலை பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரங்கநாயகி அமர்ந்திருந்த சீட்டின் அருகே 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.
பஸ் கண்ணமங்கலம் அருகே வந்து கொண்டிருந்த போது ஒரு வாலிபர் ரங்கநாயகி அணிந்திருந்த செயினை பறித்து தப்பிக்க முயற்சி செய்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாயகி கூச்சலிட்டார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் செயின் பறிப்பில் 2 பெண் உள்பட 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.