செய்திகள்

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

Published On 2018-08-01 15:50 GMT   |   Update On 2018-08-01 15:50 GMT
சீரான குடிநீர் வழங்கக்கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்தித்தோப்பு ஊராட்சி அலுவலகம் அருகே இந்திரா காலனி உள்ளது. இங்கு சுமார் 300 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஊராட்சி மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்து வந்தனர். இந்த தண்ணீரை தான் மக்கள் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். 

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக இப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 

இதையடுத்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையில் இந்திரா காலனியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தத்திடம் மனு அளித்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா, தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன், தங்கமாரியம்மாள், சுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News