செய்திகள்

கொம்பாக்கத்தில் தோழி இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை

Published On 2018-07-30 09:32 GMT   |   Update On 2018-07-30 09:32 GMT
கொம்பாக்கத்தில் தோழி இறந்த துக்கத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை கொம்பாக்கம் செட்டிக்களம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்கள். இவர்களது மகள் ஜெயஸ்ரீ(வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

ஒதியம்பட்டை சேர்ந்த ஜெயஸ்ரீயின் தோழி லதா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தோழி இறந்தது முதல் அவர் நினைவாகவே ஜெயஸ்ரீ இருந்து வந்தார். இந்த நிலையில் தோழி இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று அவரது உருவ படத்துக்கு ஜெயஸ்ரீ மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதுமுதல் ஜெயஸ்ரீ சோகமானார்.

இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் கூரையில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூக்குபோட்டு தொங்கினார். எதேச்சையாக அருகில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்த போது ஜெயஸ்ரீ தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News