ஓசூர் அருகே யானைகள் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் பீதி
ஓசூர்:
ஓசூர் அருகே செட்டிப் பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 6 யானைகள், பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளன.
இந்த யானைகள் பகல் நேரத்தில், வனப்பகுதியில் முகாமிட்டு ஓய்வெடுப்பதும், இரவு நேரத்தில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். நேற்று பட்டப்பகலிலேயே இந்த யானைகள் ஊருக்கு அருகில் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிக்கு அந்த பகுதிமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைகளை வனத்துறையினர் வெடி காட்டுக்குள் விரட்டி விட்டனர். இதனால் அந்த பகுதிமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் இரவு நேரங்களில் யானைகள் கிராமத்துக்குள் வருவது வழக்கம். ஆனால் நேற்று பட்டப்பகலில் யானைகள் கிராமத்திற்கு வந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
யானைகள் நடமாட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.