செய்திகள்

விவசாயி வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் திருடிய என்ஜினீயர் கைது

Published On 2018-07-25 10:33 GMT   |   Update On 2018-07-25 10:33 GMT
குறிஞ்சிப்பாடி அருகே ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி விவசாயி வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 47). விவசாயி. இவர் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

குமாருக்கு ஏ.டி.எம். மூலமாக பணம் எடுக்க தெரியாததால் அங்கு பணம் எடுக்க வந்த மற்றொரு நபரிடம் குமார் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.

உடனே அந்த நபர் குமாரின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முயன்றார். அந்த எந்திரத்தில் பணம் வரவில்லை எனக்கூறிவிட்டு அங்கிருந்த மற்றொரு எந்திரத்தில் குமாருக்கு பணம் எடுத்து கொடுத்தார். உடனே குமார் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் அந்த நபர் ஏற்கனவே பணம் வரவில்லை எனக்கூறிய ஏ.டி.எம்.எந்திரம் மூலம் குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து குமார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றபோது அவரது வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வங்கி அதிகாரியிடம் கேட்ட போது, அவர் உங்கள் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதைகேட்ட அதிர்ச்சியடைந்த குமார் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஏ.டி.எம்.எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை ஆய்வு செய்தபோது அதில் குமார் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய அந்த நபர் முகம் பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மர்மமனிதரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீழ்அனுவம்பட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(31) என்பதும், அவர் என்ஜினீயர் என்பது தெரியவந்தது. பின்னர் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
Tags:    

Similar News