செய்திகள்

எலச்சிபாளையம் அருகே நடந்து சென்ற தபால்காரர் கார் மோதி பலி

Published On 2018-07-22 17:23 GMT   |   Update On 2018-07-22 17:23 GMT
எலச்சிபாளையம் அருகே, நடந்து சென்ற தபால்காரர் மீது கார் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அடுத்துள்ள இலுப்பிலி கிராமத்தை சேர்ந்தவர் செங்கோடன் (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தபால்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தங்கம்மாள் (50) என்ற மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் செங்கோடன் நேற்று மதியம் 12 மணியளவில், இலுப்பிலியில் இருந்து எலச்சிபாளையம் - மாணிக்கம்பாளையம் செல்லும் சாலையில் சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று இவர் மீது மோதியதில், உடலில் பலத்த காயம் அடைந்த செங்கோடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து செங்கோடனின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News