ஆண்டிப்பட்டி அருகே திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தற்கொலை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே வண்டியூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (வயது 23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் கணவன்-மனைவி திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். உடல் நிலை சரி இல்லாததால் முருகேஸ்வரி வண்டியூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.
தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த முருகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முருகேஸ்வரியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் மேல் விசாரணைக்கு பின்புதான் முருகேஸ்வரி உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது தெரிய வரும்.
ஆண்டிப்பட்டி அருகே கோவில்பாறையைச் சேர்ந்தவர் நாட்டுத் துரை மனைவி சுருளியம்மாள் (வயது 45). நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் தென்னை மரத்துக்கு வைக்கும் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #womansuicide