களக்காட்டில் தொழிலாளி மீது தாக்குதல் - 2 பேர் கைது
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலபத்தை ஆசாத்புரத்தை சேர்ந்தவர் சைமன்ராஜ்(வயது 35) கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த யோசேத்து என்பவரின் தோட்டத்தில் வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில் யோசேத்துக்கும் இதே பகுதியை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் யோசேத்து, கவுதமை அரிவாளால் வெட்டினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சைமன்ராஜ், யோசேத்து தோட்டத்தில் வேலைபார்ப்பது கவுதமுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கவுதம், சைமன்ராஜ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கவுதம், அவரது தம்பி சாஜன்(20), கவிகுமார் ஆகியோர் சேர்ந்து சைமன்ராஜை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கவுதம், சாஜனை கைது செய்தனர். கவிகுமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.