செய்திகள்

மருங்கூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை - பணம் கொள்ளை

Published On 2018-07-08 14:16 GMT   |   Update On 2018-07-08 14:16 GMT
மருங்கூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஞ்சுகிராமம்:

மருங்கூர் அருகே உள்ள இரவிபுதூரைச் சேர்ந்தவர் ரமேஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமிர்த ஆரோக்கிய மதுமதி (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 5-ந் தேதி மதுமதி தர்மபுரியில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு குழந்தைகளுடன் சென்றார். நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன.

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 கிராம் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், கேமரா, ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மதுமதி வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி மதுமதி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லைசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News