மதுரை அருகே வாடகைக்கு வீடு தர மறுத்த முதியவரின் மனைவியிடம் நகை பறிப்பு
மதுரை:
மதுரை விளாங்குடி டெம்சி காலனியைச் சேர்ந்தவர் ராமையா (வயது 70). இவரது வீட்டின் கீழ்த்தளத்தில் தினேஷ் என்பவர் மனைவியுடன் குடியிருந்தார்.
இவர் சரிவர வாடகை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கூறவே, தினேஷ் காலி செய்தார். அதன் பிறகு அவர் அந்தப்பகுதியில் வீடு தேடி அலைந்தார். கிடைக்கவில்லை.
எனவே தினேஷ் மீண்டும் ராமையாவை சந்தித்து தனக்கு வீட்டை வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் ராமையா, மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேசும், அவரது கூட்டாளியும் கணவன்-மனைவியை வழிமறித்து வீடு தருமாறு கேட்டனர். அதற்கு ராமையா மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தினேசும், கூட்டாளியும் ராமையா மனைவி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.