செய்திகள்

காவிரி ஆணைய நடவடிக்கை தெரிந்தபிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் - எடப்பாடி பழனிசாமி

Published On 2018-07-02 06:28 GMT   |   Update On 2018-07-02 06:28 GMT
காவிரி ஆணைய நடவடிக்கை தெரிந்தபிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #CauveryManagementAuthority #EdappadiPalaniswami
சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினை தொடர்பாக நீண்ட நெடுங்காலம் போராடி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்குபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதன் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது நல்ல முறையில் நடந்து நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் நமக்கு 14ž டி.எம்.சி. தண்ணீர் இழப்புதான். என்றாலும் இந்த தண்ணீராவது நமக்கு நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள்.

காவிரி நீரை நமக்கு தராமல் தடுக்க கர்நாடக முதல்-மந்திரி முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இன்று நடைபெறும் முதல் கூட்டத்தில் நமது உரிமைகளை பெரும்வகையில் உறுதியாக இருக்க வேண்டும். அதிக மழை பெய்து வரும் வெள்ளத்தையெல்லாம் நமது பங்கில் அவர்கள் கணக்கு வைத்துவிடக் கூடாது. சுமூகமான முறையில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எதிரான கருத்து இல்லை.

கர்நாடக முதல்-மந்திரி பிரதமரை சந்தித்து விட்டு வந்த பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப் போவதாக கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும். எனவே இன்றைய முதல் கூட்டத்தில் நமது கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் காவிரி பற்றிய அனைத்து கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

காவிரி பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். இந்தப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. 15 ஆண்டு இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.



காவிரி ஆணையம் தொடர்பாக குழு அமைப்பது பற்றியும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவது குறித்தும் விளக்கமாக சொன்னது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் உடனே நியமிக்கப்பட்டனர். கர்நாடக அரசும் குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நமது தரப்பில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பதை நமது பிரதிநிதிகளுக்கு சொல்லி இருக்கிறோம். மூத்த அமைச்சர்கள், அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து பேசி அவர்கள் செயல்பட வேண்டிய முறைகளை தெரிவித்து இருக்கிறோம்.

முதல் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு இப்போது கூடி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப் படி நமக்கு 177.25 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் ஒழுங்காற்று குழு கூடி நமக்கு தர வேண்டிய தண்ணீர் அளவை நிர்ணயிப்பார்கள்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்திற்கு பிறகு அது செயல்படும் விதம் நமக்கு தெரிய வரும். அதன் பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நாம் தக்க முடிவை எடுப்போம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார். #CauveryManagementAuthority #EdappadiPalaniswami

Tags:    

Similar News