செய்திகள்

திருவண்ணாமலையில் உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-06-27 17:53 GMT   |   Update On 2018-06-27 17:53 GMT
திருவண்ணாமலையில் நடைபெற்ற உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, இந்தியன் ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து உலக போதை பழக்கம் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலால் உதவி ஆணையர் தண்டபாணி வரவேற்றார்.

ஊர்வலத்தை கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று திருமஞ்சனம் கோபுரம் அருகில் நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, போதை பழக்கம் எதிர்ப்பு குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். மேலும் மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம் காலை 9.30 தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் மாணவர்கள் காலை 9 மணிக்கே தாலுகா அலுவலகத்திற்கு வந்து வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். ஆனால் ஊர்வலம் 10.30 மணிக்கு மேல் தான் தொடங்கப்பட்டது. 1½ மணி நேரத்திற்கும் மேலாக மாணவ, மாணவிகள் நின்றதால் சோர்வைடைந்தனர்.

எனவே, வரும் காலங்களில் காலதாமதமின்றி ஊர்வலத்தை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
Tags:    

Similar News