எடமலைப்பட்டிபுதூர் ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேரிடம் போலீசார் விசாரணை
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மரியபுஷ்பம் என்ற மனைவியும், ஹரிஷ் (5), ஆதித்யா (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் செந்தில்குமார் வீட்டில் கட்டில் அருகே தரையில் விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மரியபுஷ்பம் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் நேற்று முன்தினம் ராமச்சந்திரா நகரில் டாஸ்மாக் கடை அருகே தனது கணவர் செந்தில்குமாருக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் தாக்கப்பட்டதால் அவர் இறந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது செந்தில்குமார் தாக்கப்பட்டதில் காயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்ற உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக போதையில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் பலர் சேர்ந்து தாக்கியதில் செந்தில்குமார் இறந்ததாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.