செய்திகள்

தேவதானப்பட்டியில் பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல் அதிகரிப்பு

Published On 2018-06-16 11:28 GMT   |   Update On 2018-06-16 11:28 GMT
தேவதனப்பட்டியில் பெண்களிடம் நகை, பணம் பறிக்கும் கும்பல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பீதி அடைந்துள்ளனர்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த நபர்கள் வந்தனர்.

இதனை கண்ணாடியில் பார்த்து சுதாரித்த பாலமுருகன் தனது பைக்கை மெதுவாக ஓட்டி வந்தார். தனியார் கல்லூரி அருகே வந்தபோது திடீரென அவரது மனைவியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர். உடனே பாலமுருகன் அவர்களை தட்டி கீழே விழ செய்தார். இருந்தபோதும் வழிப்பறி கும்பல் மோட்டார் சைக்கிளில் நாகம்பட்டி பிரிவு வழியாக தப்பித்து ஓடிவிட்டனர்.

தேவதானப்பட்டி அருகில் உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது30). இவர் சம்பவத்தன்று பெரிய குளத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக அரிசி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஏறினார்.

அதே பஸ் ஸ்டாப்பில் 2 பெண்கள் ஏறி உள்ளனர். அதில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் இருந்துள்ளார். அவர்கள் லட்சுமிபுரத்திற்கு டிக்கெட் எடுத்தனர். சாந்தி முன்னதாக இறங்க முயன்றபோது கூட்ட நெரிசலில் அந்த பெண்கள் அவர் பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டனர்.

பெரியகுளத்தில் இறங்கி பார்த்தபோது தனது பணம் மற்றும் செல்போன் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்து மீண்டும் ஆட்டோவில் ஏறி அந்த பஸ்சில் பார்த்தார். ஆனால் அந்த 2 பெண்களும் இல்லை.

தேவதானப்பட்டி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்ற கருவூல அதிகாரியின் மனைவியிடம் நகை பறிக்கப்பட்டது. இதேபோல சினிமா தியேட்டர் அருகிலும், பாலிடெக்னிக் அருகிலும் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. ஆனால் கொள்ளையர்கள் யாரும் பிடிபட வில்லை.

ஆண்களை போலவே பெண்களும் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே போலீசார் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News