செய்திகள்

மணலிபுதுநகரில் விவசாயி வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் மோசடி

Published On 2018-06-14 06:23 GMT   |   Update On 2018-06-14 06:23 GMT
மணலிபுதுநகரில் விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த விச்சூரை சேர்ந்தவர் ரவீந்திர நாத்.

விவசாயியான இவருக்கு நெல் விற்பனை செய்தது தொடர்பாக ரூ.6½ லட்சம் காசோலையாக கிடைத்தது. இந்த காசோலையை மணலி புதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரவீந்திரநாத் செலுத்தினார்.

இந்த பணத்தை ஏ.டி.எம்.மில் ரவீந்திரநாத் எடுக்க முயன்றார். அப்போது வங்கியில் போட்டு வைத்திருந்த ரூ.6½ லட்சம் பணத்தில் பெருமளவு பணம் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. மொத்தம் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி ரவீந்திரநாத் வங்கியில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் உங்களது பணம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தினர்தான் இதனை எடுத்திருப்பார்கள் என்று கூறினார்.

இது ரவீந்திரநாத்துக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி குடும்பத்தினரிடம் விசாரித்த போது அது போன்று யாரும் பணத்தை எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரவீந்திரநாத் மணலி புதுநகர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கிக்கு நேரில் சென்றும் போலீசார் விசாரித்தனர். நேரில் சென்று ரவீந்திரநாத் கணக்கில் இருந்து பணம் எடுத்தது யார்? என்பதை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை பார்த்து ஆய்வு செய்த பின்னரே இந்த மோசடியின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தெரியவரும். #Tamilnews

Tags:    

Similar News