செய்திகள்

நெல்லையில் ஆசிரியர் மனைவியிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published On 2018-06-05 16:21 GMT   |   Update On 2018-06-05 16:21 GMT
நெல்லையில் ஆசிரியர் மனைவியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
நெல்லை:

நெல்லையில் ஆசிரியர் மனைவியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழ சாலைப்புதூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரசுவதி (வயது 32). சரசுவதியின் பெற்றோர் வீடு நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ளது.

நேற்று முன்தினம் ராமமூர்த்தி, சரசுவதி ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் நெல்லை டவுன்- தச்சநல்லூர் சாலையில் ராமையன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். ராமையன்பட்டி விலக்கு பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர்.

அவர்களில் ஒருவர், திடீரென்று சரசுவதி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கலியை பறித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ராமமூர்த்தி நிலைதடுமாறினார். கணவன்- மனைவி இருவரும் திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டனர். அதற்குள் அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தச்சநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை டவுன்- தச்சநல்லூர் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News