ஓய்வு பெறும் நாளில் கால்நடைத்துறை இணை இயக்குனர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனராக இருந்தவர் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து. இவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மீது மாவட்ட அளவில் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்வதும் பின்னர் அவர்களை அதே இடத்தில் பணிஅமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் இயக்குனர் நிலையிலான அதிகாரிகள் அவரிடம் நேரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இணை இயக்குனர் வேதமுத்து மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை செயலர் கோபால் உத்தரவின் பேரில் இணை இயக்குனர் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து ஓய்வு பெறும் நாளான நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவர் முத்துசாமி பாண்டியன், கால்நடை ஆய்வாளர் பாலசந்திரன், ஆகியோர் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.