போடி பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் மணல் கடத்தல்
மேலசொக்கநாதபுரம்:
போடி மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. எனவே இதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழையைக்கொண்டு விவசாயிகள் மா, பலா, இலவமரங்கள் மற்றும் மானாவாரி பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மணல்கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் ரோந்து சென்று மணல் கடத்தும் கும்பலை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் திருட்டை தடுக்கமுடியவில்லை.
போடி அருகே கரட்டுப்பட்டி ஓடையில் டிராக்டரில் சிலர் மணல் கடத்துவதாக குரங்கணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் டிராக்டரை மடக்கி சோதனையிட்டனர். அதில் மணல் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் நல்லசாமியை கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளர் முத்துராஜை தேடி வருகின்றனர்.