செய்திகள்

எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2018-05-10 06:51 GMT   |   Update On 2018-05-10 06:51 GMT
பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது.
சென்னை:

பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலை தளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்தரமான கருத்துக்களை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, எஸ்.வி. சேகரும் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தின் அடிப்படையில், இந்த செய்தியையும் முழுமையாக படித்துப்பார்க்காமல், அப்படியே பதிவு செய்து விட்டேன். வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பத்திரிகையாளர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. #SVeShekher
Tags:    

Similar News