செய்திகள்

தஞ்சை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-05-08 17:49 GMT   |   Update On 2018-05-08 17:49 GMT
தஞ்சை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் அன்னப்பன் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 40). இவர் அரசு விரைவு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலெட்சுமி.

இந்த நிலையில் நேற்று இரவு ரவிச்சந்திரனும், தனலெட்சுமியும் காற்று வாங்குவதற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர். அப்போது இதை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் இவர்களது வீட்டிற்குள் நுழைந்து தனலெட்சுமி அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

பின்னர் காலையில் எழுந்து பார்க்கும் போது கழுத்தில் இருந்த செயின் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து மெலட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் அன்னப்பன் பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (40). விவசாயி இவரும் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் இவர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து விட்டு வீட்டிற்குள் புகுந்தார்.

பின்னர் பீரோவை உடைத்து பார்த்துள்ளார் அதில் ஒன்றும் இல்லாததால் வீட்டில் இருந்த சுமார் ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதைத் தொடர்ந்து வீட்டில் திருட்டு போயிருப்பது குறித்து தெரிந்ததும் தெட்சிணாமூர்த்தி மெலட்டூர் போலீசில் புகார் செய்தார்.ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 2 வீடுகளிலும் ஒரே நபர் தான் கைவரிசை காட்டியுள்ளாரா? அல்லது வேறு யாராவது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 2 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News