செய்திகள்

தேர்தல் அலுவலர் வராததை கண்டித்து சாலை மறியல்

Published On 2018-05-03 16:26 GMT   |   Update On 2018-05-03 16:26 GMT
கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்ய அதிகாரி வராததால் அதனை கண்டித்து மறியல் நடந்தது.
வந்தவாசி: 

வந்தவாசி டவுன் பெரிய காலனி பகுதியில் வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் 11 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்க உள்ளது. தேர்தலையொட்டி கடந்த 30-ந்தேதி தேர்தல் அலுவலர் எம்.நீலகண்டனிடம் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட வேண்டும். வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் காத்திருந்தும் தேர்தல் அலுவலர் நீலகண்டன் வரவில்லை. பல மணி நேரம் பொறுத்திருந்தவர்கள் அலுவலர் வராததால் பொறுமை இழந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் அலுவலர் வராததை கண்டித்து வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் மற்றும் விவசாயிகள் வந்தவாசி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

இதனை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News