செய்திகள்

எஸ்.வி.சேகர் வழக்கில் போலீஸ் பாரபட்சம் காட்டுகிறதா?- ஐகோர்ட்டு கேள்வி

Published On 2018-05-03 07:28 GMT   |   Update On 2018-05-03 09:17 GMT
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்தை பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் போலீஸ் பாரபட்சமாக நடந்து கொள்கிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. #SVShekher #HighCourt
சென்னை:

நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல, இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத் துரை, நக்கீரன் பிரகாஷ், ஜெ.கவின்மலர், பெண் வக்கீல்கள் சங்கம் உள்பட ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள் எல்லாம் கடந்த வாரம் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, இடைக்கால ஜாமீனோ அல்லது கைது செய்யக்கூடாது என்றோ உத்தரவிட முடியாது என்று நீதிபதி மறுத்து, விசாரணையை தள்ளிவைத்தார்.


இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ராமதிலகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் சார்பில் வக்கீல் மயிலை சத்தியா ஆஜராகி, ‘பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி.சேகர் வேண்டும் என்றே பதிவு வெளியிடவில்லை.

வேறு ஒரு நபர் வெளியிட்ட பதிவை தெரியாமல், முழுவதுமாக படித்து பார்க்காமல், தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விட்டார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பெண் வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராமதிலகம், ‘பெண் பத்திரிகையாளர்களை அவதூறு செய்ததை கண்டித்து எஸ்.வி.சேகர் வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களை போலீசார் உடனே கைது செய்து விட்டனர்.

ஆனால், பெண்களை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்யும் பதிவை தன் முகநூலில் பதிவிட்டவரை கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் போலீசார் பாரபட்சமாக நடக்கின்றனரா? சட்டம் என்பது எல்லாருக்கும் பொதுவானது.

அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு தான் செயல்பட வேண்டும் என்று கடும் கண்டன கருத்துக்களை பதிவு செய்தார். பின்னர், இந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். #SVShekher #HighCourt
Tags:    

Similar News