செய்திகள்

சிற்றபாக்கம் தடுப்பு அணை முற்றிலும் வறண்டது - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Published On 2018-05-03 07:13 GMT   |   Update On 2018-05-03 07:13 GMT
ஊத்துக்கோட்டை அருகே சிற்றபாக்கம் தடுப்பு அணை முழுவதுமாக தண்ணீர் இன்றி வறண்டதால் வீடுகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை உள்ளது. 10 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தேவைப்படும் போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும்.

மேலும் வெள்ளம் ஏற்பட்டால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பி உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வெயில் கொளுத்தி வருவதால் தடுப்பு அணையில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வந்தது. கடந்த வாரம் முழுவதுமாக தண்ணீர் இன்றி வறண்டது.

இந்த தடுப்பு அணை பகுதியில் தான் ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளது. இவற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டையில் 10 பகுதிகளில் அமைத்துள்ள நீரேற்று மேல்நிலைத் தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

தடுப்பு அணை முழுவதும் வறண்டதால் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப்போதே பல வீடுகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருவதில்லை என்று பொது மக்கள் பலர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News