செய்திகள்

திருச்சி அருகே நடு ரோட்டில் கவிழ்ந்த தனியார் ஆம்னி பஸ் - 25 பயணிகள் காயம்

Published On 2018-04-29 12:09 GMT   |   Update On 2018-04-29 12:09 GMT
திருச்சி அருகே நடு ரோட்டில் தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 25 பயணிகள் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை:

சென்னையில் இருந்து தென்காசிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த பஸ் இன்று அதிகாலை 5 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங் குறிச்சி அருகே பிரிவு சாலையில் திரும்ப முயன்றது. அப்போது பின்னால் வந்த மற்றொரு வாகனம் பஸ் மீது உரசி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் நிலை குலைந்த ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் அந்த பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.

அந்த வழியாக சென்ற வாகனங்கள் கொடுத்த தகவலின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்கு இடையே பலர் காயங்களுடன் உயிருக்கு போராடினர். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் பெயர், விபரம் வருமாறு:-

கபில் (வயது 23, சென்னை), மாரித்துரை (ஆலங்குளம்), ராஜ்குமார் (பாவூர்சத்திரம்), வள்ளியம்மாள் (பம்மல்), லெட்சுமி (திருக்கழுக்குன்றம்), செல்வராஜ், சம்சுதீன், ரசூல், மாரியப்பன், பிரீத்தி, மாணிக்க விநாயகம், சண்முக ராஜா, அஜீத், மணிகண்டன், நைனார் உள்ளிட்டோரை மீட்டு துவரங்குறிச்சி, மணப்பாறை, திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் குறைந்த அளவே இருந்ததால் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வாகனத்தில் காயம் அடைந்தவர்களை ஏற்றி அழைத்து சென்றனர்.

இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News