திருமங்கலம் அருகே தோட்டத்திற்குள் புதைத்த 78 கிலோ கஞ்சா பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள அழகு ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மொக்கைச்சாமி. இவருடைய மகன் ரவிச்சந்திரன் (வயது 30).
இவரது தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது தோட்டத்தில் குழி தோண்டி அதனுள் டிரம்மிற்குள் கஞ்சாவை வைத்து புதைத்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்த 78 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ரவிச்சந்திரன், செல்வம் மனைவி தெய்வம் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காசிப்பாண்டி (27), தர்மர் பாண்டி (25), ரவி (30) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேடப்பட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை சேகர் மனைவி செல்வி (47). இவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், செல்வியையும் கைது செய்தனர்.