செய்திகள்

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பேராசிரியர் முருகனிடம் விடிய, விடிய விசாரணை

Published On 2018-04-26 04:33 GMT   |   Update On 2018-04-26 04:33 GMT
நிர்மலா தேவி விவகாரத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பேராசிரியர் முருகனிடம் போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். #NirmalaDevi #Murugan
விருதுநகர்:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் செல்போனில் பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாலியலுக்கு மாணவிகளை அழைத்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர்.

நிர்மலாதேவி கொடுத்த தகவலின்பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகனை கைது செய்தனர். பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.

கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன் சாத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் 10 நாள் போலீஸ் காவல் கேட்டு சி.பி.சி.ஐ.டி. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மாஜிஸ்திரேட்டு கீதா மனுவை விசாரித்து பேராசிரியர் முருகனுக்கு 5 போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே அவரை கைது செய்து விசாரித்தபோது பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் யார் பெயரையும் பேராசிரியர் முருகன் தெரிவிக்கவில்லை.

இன்று 2-வது நாளாக பேராசிரியர் முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நிர்மலாதேவியின் செல்போன் ஆதாரங்களை காட்டி பேராசிரியர் முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய கருப்பசாமி இன்று சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது. முருகன் மற்றும் கருப்பசாமியிடம் தீவிர விசாரணை நடைபெற உள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார்? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NirmalaDeviAudio

Tags:    

Similar News