செய்திகள்

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-04-25 11:29 GMT   |   Update On 2018-04-25 11:29 GMT
திண்டுக்கல் அருகே வெவ்வேறு இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள ஆவிச்சிபட்டி கிராமம் நடுவனூரில் கடந்த 6 மாதமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நத்தம் - சிறுகுடி சாலையில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் நிறுத்தப்பட்டன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நத்தம் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் அங்கு விரைந்து வந்து அதிகாரிகளிடம் பேசி விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் சுமார் 1 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதே போல் திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து ஊராட்சி ரெட்டியார்பட்டியில் கடந்த 1 வருடமாகவே குடிநீர் பிரச்சினை நீடித்து வருவதாகவும், மாவட்ட கலெக்டர் முதல் யூனியன் அலுவலகம் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

இதனால் இன்று காலை 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் வந்து உறுதிமொழி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News