சண்முகாபுரத்தில் குளிர்பான விற்பனை பிரதிநிதி தற்கொலை
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது34), இவர் தனியார் குளிர்பான விற்பனை பிரதிநிதியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக திருநாவுக்கரசு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருநாவுக்கரசுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்னர் படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் திருநாவுக்கரசு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.