செய்திகள்

குன்றத்தூரில் கிரிக்கெட் மட்டையால் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் கொலை

Published On 2018-04-23 09:39 GMT   |   Update On 2018-04-23 09:39 GMT
குன்றத்தூரில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதால் 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி:

குன்றத்தூர் தேவி கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் (19). 9-ம் வகுப்பு மாணவரான இவன் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடினான்.

அப்போது தீனதயாளனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது.

இதில் தீனதயாளன் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டார். சிறுவர்கள் சிலர் கீழேயும் தள்ளி விட்டுள்ளனர். இதில் தீனதயாளன் தலையில் வெளியில் காயம் ஏதும் இல்லை. உள் பகுதியில் காயம் இருந்துள்ளது.

இந்த நிலையில் மாணவன் தயாளன் நேற்று திடீரென ரத்த வாந்தி எடுத்தான். தலையில் ஏற்பட்ட உள்காயம் காரணமாகவே அவன் வாந்தி எடுத்துள்ளான். அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தீனதயாளனை கொண்டு சென்றனர். ஆனால் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது பற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீனதயாளனை தாக்கியதாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News